Store
  Store
  Store
  Store
  Store
  Store

கண்ணில் சிக்குமா அமானுஷ்ய ஆவி...?


   விகளின் அறிமுகம் கிடைத்த ஆரம்ப நிலையில் இருப்பவர்க்குப் பொதுவாக ஆவிகளைப் பற்றி சிறிதளவேணும் அறிந்திருப்பவர்களுக்கு ஒரு கேள்வி எழும்புவது உண்டு.  மரணத்திற்குப் பின்னால் மேலுலக வாழ்க்கையை அனுபவிக்கும் ஆவிகள் அடிக்கடி பூமிக்கு வருவது ஏன்?  அது எப்படி நிகழ்கிறது?  அப்படி பூமிக்கு வரும் ஆவிகள் இங்கே எந்த எந்த இடங்களில் அதிகமாக வசிக்கும் என்று.

  இதற்கான பதிலைப் பெறுவது சற்று சிரமமான விஷயம்தான்.  இருப்பினும் இந்தக் கேள்விகளுக்கு ஓரளவேணும் பதில் தெரிந்து  வைத்திருப்பது அத்யாவசியம் ஆகும்.  இது மட்டுமல்ல ஆவிகள் நடமாடும் இடம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.  காரணம் ஆவிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு இத்தகைய அறிவு அடிப்படையான பலன்களைத் தரும்.  அதோடு மட்டுமல்லாமல் ஆவிகளோடு தொடர்பு ஏற்படும் போது இத்தகைய அனுபவ அறிவு ஆவிகளின் செயல்களையும் அவைகளின் மனோபாவத்தையும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.  ஒரு ஆவியின் மனோபாவத்தைக் கணிக்க முடியாதபோது அந்த ஆவியால் ஏற்படும் சாதக பாதகங்களை நம்மால் சரிவர எதிர்கொள்ள முடியாமல் போய்விடும்.


   இனி ஆவிகள் எப்படி ஏன் பூமிக்கு வருகின்றன என்பதைப் பற்றி பார்போம்.  ஆரம்ப அத்தியாயங்களில் மரணம் ஏற்பட்டவுடன் இறப்பு தேவதைகளால் உயிரானது அழைத்துச் செல்லப்படும் இடங்களைப் பற்றயும் அவைகள் எதிர்கொள்ளும் அனுபவங்களைப் பற்றியும் விரிவாகவே பார்த்து இருக்கிறோம்.  அப்படி பயணப்படும் நேரத்தில் அதாவது ஆவிகளுக்கான தண்டனையோ சன்மானமோ கொடுக்கப்படும் நேரத்திலும் அவ்வப்போது ஆவிகள் பூமிக்கு வர அனுமதிக்கப்படுவது உண்டு.

  அதற்குக் காரணம் பூமியில் உள்ள ஆவியின் சந்ததியினர் இறந்துபோன அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்.  அவர்களுக்காக என்ன என்ன செய்கிறார்கள் என்பதை சூட்சம் தேகிகள் உண்ர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.  அப்படி அவர்கள் பூமிக்கு வரும்போது தங்களைப் பற்றி சந்ததிகள் மறந்து இருந்தால் ஆத்திரப்படுவார்கள்.  நினைவுகளோடு இருந்தால் ஆசிர்வதிப்பார்கள். 



   இத்தகைய ஆத்திர உணர்வும் ஆசீர்வாத உணர்வும் ஆவிகளின் நல்லது தீயது போன்ற குணாதிசயங்களை உருவாக்க வாய்ப்பாக அமைகிறது.  மேலும் இறந்து போய் ஒரு வருடத்திற்குப் பிறகு சில குறிப்பிட்ட வரையரையளுக்கு உட்பட்டு ஒரளவு சுதந்திரத்துடன் ஆவிகள் பூமிக்கு வந்து செல்ல மேலுலகத் தேவதைகள் அனுமதி அளிக்கின்றன.  தங்களது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கம் நரகம் என்ற வாழ்ககைத் தரத்தை ஆவிகள் மேலுலகில் பெற்றிருந்தாலும் அடுத்து ஓர் பிறப்பை அவைகள் பெறும்வரை பூமிக்கு வந்து செல்ல அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது.

   அவ்வப்போது ஆவிகள் தங்களது பூர்வ கால வசிப்பிடங்களுக்கு வந்து சென்றாலும் நிரந்தரமாக அவைகள் பூமியில் தங்குவது இல்லை.  தங்கவும் முடியாது.  கருடபுராணத்தின் மிகப் பழைய பிரதி ஒன்றில் ஆவிகள் ஒரு மாதத்தில் 240 நாழிகை மட்டுமே பூமியில் நடமாட முடியும்  என்று கூறப்படுகிறது. தற்காலத்தில் ஆவிகள் மனித உடலில் எவ்வளவு நேரம் தங்க முடியும் என்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டபோது 15 நிமிடங்கள் மட்டுமே ஆவியால் மனித உடலை ஆக்கிரமிக்க முடியும் என்பது தெரியவந்து உள்ளது.  இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது ஆவிகள் பூமியில் நிரந்தரமாகத் தங்க இயலாது என்பதும் அதே நேரம் பூமிக்கும் தங்களது சொந்த உலகிற்கும் அலைந்து கொண்டு இருக்க மட்டும்தான் முடியும் என்பது தெளிவாகிறது.


  மேலும் பூமிக்கு வரும் ஆவிகள் தாங்கள் வாழ்ந்தபோது எந்த இடத்தில் விரும்பி வசித்தனரோ அந்த இடங்களுக்குத்தான் வந்து செல்ல விரும்புகிறது.  உயிர் பிரிந்த இடத்தில்தான் ஆவிகள் நடமாடும் என்பது தவறான நம்பிக்கையாகும்.  காரணம் மிகத் தெளிவானதாகும்.  அயல் நாட்டில் ஒருவன் உயிர் பிரிகிறது என்று வைத்துக் கொள்வோம்.  அப்படிப் பிரிந்த உயிர் உடனடியாக தன்னால் நேசிக்கப்பட்ட குடும்பத்தினர் இருக்கும் இடத்திற்கு வந்து ஏதோ ஒரு நிமித்தம் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் அறிகுறி மூலமாகவோ தனது இறப்பை குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்துகிறது.  அப்படி தெரியப்படுத்தப்பட்ட அனுபவங்கள் பல உள்ளன.

  எனது நண்பர் ஒருவர் அரசு வேலை கிடைத்தால் தஞ்சாவூர்க்கு சென்று பணி புரிய வேண்டியதாயிற்று.  அவர் எங்களிடத்தில் இருந்தபோது நானும் முருகவேல் என்ற வேறு ஒருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.  அவர் தஞ்சாவூர்க்குப் பிரிந்து சென்றதிலிருந்து மனதிற்குள் இளம்புரியாத சோகம் மூன்று பேருக்குமே உண்டு.  இதை நானும் நண்பர் முருகவேலும் அடிக்கடி பேசி ஆற்றிக்கொள்வோம்.  


  திடீரென்று ஒரு நாள் காலை தஞ்சாவூலுருக்கும் நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.  முருகவேல் எப்படி இருக்கிறான்  என்று என்னிடம கேட்டார்.  நன்றாகத்தானே இருக்கிறார்.  நேற்று இரவு கூட வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.  ஏன் திடீரென்று அவரைப் பற்றிக் கேட்கிறாய் என்று நான் கேட்டேன்.

 ஒன்றுமில்லை….  இப்போது 10 நிமிடத்திற்கு முன்பு முருகவேல் என் அலுவலக வாசலில் நின்றதைப் பார்த்தேன்.  ஒருவேளை அவன் தஞ்சாவூர் வந்திருக்கிறானோ என்று தெரிந்து கொள்ளவே போன் செய்தேன்.  இருந்தாலும் மனது ஏதோபோல் இருக்கிறது.  சரி பரவாயில்லை என்றார். 

  நானும் முருகவேல் அரகண்ட நல்லூரில்தான் இருக்கிறார்.  அவரைப் போன்று வேறு யாரையாவது பார்த்திருப்பாய் எனக்கூறி தொலைபேசியை வைத்து விட்டேன்.  வைத்த 10வது நிமிடம் ஒரு ஆள் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க என்னிடம் விரைவாக வந்தார்.  உங்களுக்கு விஷயம் தெரியுமா என்றார்.  


 அவர் குரலில் படபடப்பும் தடுமாற்றமும் இருந்தது.  அவர் முகபாவம் அவரின் விழிகள் அலைந்த விதம் இவர் ஏதோ அதிர்ச்சியான விஷயத்தைச் சொல்லப் போகிறார் என்பதை எனக்குத் தெளிவாக காட்டியது.  ஏன் என்ன விஷயம்  நிதானமாகச் சொல்லுங்கள் எதற்காகப் பதட்டப்படுகிறீர்கள் என்று அவரை ஆசுவாசப்படுத்தினேன்.  அவர் தான் அமைதி பெறாமலே அடுத்த அதிர்ச்சியை எடுத்து வைத்தார்.  உங்கள் நண்பர் முருகவேல் அரைமணி நேரத்திற்கு முன் செத்து விட்டார் என்றார். 

  அதிர்ச்சியில் ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டேன்.  சற்று நேரத்தில் நிதானமான பிறகு தஞ்சை நண்பர் முருகவேலை அலுவலக வாசலில் பார்த்ததாகக் கூறியதை நினைத்தப் பார்த்தேன்.  தனது மரணம் ஏற்பட்டவுடன் தன் உயிர் நண்பர்க்குத் தன்னை வெளிப்படுத்திய முருகவேலின் நெஞ்சார்ந்த நட்பு என்னைக் கலங்கவைத்தது. 

  இதே போன்று நிறைய சம்பவங்கள் எனக்கு மட்டுமல்ல உங்களில் பலருக்கும் ஏற்பட்டு இருக்கும்.  ஆவிகள் தான் நேசித்த இடத்திற்கு வந்து செல்வதையும் தான் நேசித்த நபர்கள் வாழும் இடத்திற்குச் செல்வதை இப்படி பல நூறு அனுபவங்களில் நிருபிக்கலாம்.
  மக்களிடத்தில் ஆவிகளைப் பற்றி வேறு ஒரு அபிப்ராயம் உள்ளது.  ஆவிகள் பாழடைந்த மண்டபங்களிலும் மயானங்களிலும் அதிகமாக வாழுகின்றன என்று.  இதில பாழ்மண்டபங்களில் ஆவிகள் வசிப்பது அவ்வளவு தூரம் உண்மையானது அல்ல.  அந்த மண்டபங்களின் தோற்றம் பயமுறுத்துவதாக இருப்பதனால் பெருவாரியான ஜனங்கள் ஆவிகளோடு அவைகளைச் சம்பந்தப்படுத்தி பேசுகிறார்கள். 

    ஆனால் சில மண்டபங்களில் ஆவிகள் வசிப்பது உண்டு.  அந்த மண்டபங்கள் வாழ்ந்த போது அந்த ஆவிக்குப் பிடித்தமான இடமாகவோ அல்லது ஏதோ ஒரு வகையில் சம்பந்கப்பட்ட இடமாகவோ இருக்கலாம்.  பொதுவாக அப்படிப்பட்ட மண்டபங்களில் வசிக்கும் ஆவிகள் அமைதி அடையாமல் ஏதோ ஒரு வகையான ஆக்ரோஷத்துடன் அந்த மண்டபங்களில் இருக்கலாம்.

  ஆனால் மரங்களில் ஆவிகள் வசிப்பது உண்மையானதுதான்.  முருங்கை மரம், கருங்காலி மரம், அசோகமரம் போன்ற மரங்களிலிருந்து வெளிவரும் கரியமிலவாயுவின் தன்மை ஆவிகளின் காற்று உடம்பை பிடித்துவைத்துக் கொள்ள ஏதுவாக இருப்பதனால் இத்தகைய மரங்களில் ஆவிகள் வசிப்பது அவைகளுக்கு மிக சௌகரியமாக இருக்கும்.


  மேலும் பெருவாரியான ஆவிகள் மயானங்களில் வாழ்வதை விரும்புகின்றன.  புதியதாக வரும் ஆவிகளை வரவேற்பதற்கும் துன்புறுத்துவதற்கும் இறந்து போனவர்களுக்குத் தவறுதலாகப் படைக்கப்படும் பிண்டங்களை எடுத்துக்கொள்ளவும் புதைக்கப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட தனது உடல் மீண்டும் கிடைக்காதா என்பதற்காகவும் இன்னும் வேறு சில மாந்திரீகர்களால் கட்டப்பட்டும் ஆவிகள் மயானத்தில் நிறைந்திருப்பது இயற்கை ஆகும்.

இது தவிர பழங்கால அரண்மனைகள் போன்றவற்றில் தண்டனை பெற்ற ஆவிகள் மூர்க்கத்துடன் அலைவதையும் சாலை ஒரங்களில் விபத்துக்குள்ளான ஆவிகள் திருப்தி இல்லாமல் அலைவதையும் பழங்கால கிணற்று ஓரங்களில் தற்கொலை செய்து கொண்ட ஆவிகள் அமைதி இல்லாமல் அலைவதையும் வாஸ்து முறைப்படி கடடப்படாத வீடுகளில் சில ஆவிக் குழுக்கள் வாழ்வதையும் அனுபவத்தில் காணலாம்.


  அடுத்ததாக ஆவிகளை எல்லோராலும் பார்க்க முடிவதில்லை ஏன்?  அப்படிப் பார்த்ததாகக் கருதுபவர்களில் முக்கால வாசிபேரின் அனுபவங்களி சுய கற்பனையாகவும் மனப்பிரமையாகவும் இருக்கிறது  அப்படி இருக்க உண்மையில் ஆவிகளைப் பார்க்க முடியாதா?   ஆவிகள் நடமாடக் கூடிய சில இடங்ளில் நான்கு ஐந்து பேர் குழுக்களாகச் சென்றால் அதில் குறிப்பிட்ட ஒருவர்தான் ஆவிகள் தெரிவதாகக் கூறுகிறார்கள்.  அப்படிக் கூறுபவர்களின் மன இயல்புகளையும் உடற் கூறுகளையும் பகுத்துப்பார்க்கும் போது அவர்கள் ஏதாவது ஒரு ரீதியில் பலஹீனர்களாகவும் அடுத்தவர்களைப் பயமுருத்திப் பார்ப்பதில் இன்பம் கான்கிறவர்களாகவும் இருப்பதை அறிய முடிகிறது.  இதனாலேயே ஆவிகளைப் பார்த்தாகக் கூறும் பல சம்பவங்களை நம்ப முடியாததாக ஆகிவிடுகிறது.

  ஆவிகளைப் பார்க்கும் உண்மையான சந்தர்ப்பம் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அமைகிறது.  அனாலும் அதில் உண்மை எவ்வளவு பொய் எவ்வளவு என்பதை அவர்கள் பேச்சிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.  திருச்சியிலிருந்து சமீபத்தில் ஒரு இளைஞர் என்னிடம் வந்தார்.  அவர் நன்றாகப் படித்தவர்.  அயல் நாட்டில் வேலையும் செய்கிறார்.  தான் கல்லூப் படிப்பை மேற்கொண்ட போது மாணவர் விடுதியில் தங்கி இருந்ததாகவும் அப்போது தனது அறையினுள் திடீர் திடீர் என மல்லிகைப் பூ வாசம் வீசியதாகவும்அந்த நேரம் மெல்லியதாக வளையல் சத்தம் கேட்டதாகவும் தான் அதை அன்றைய சூழலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தொடர்ச்சியாக இதே போன்ற நிகழ்வுகள் தனது அறையில் சில மாதங்கள் நடந்ததாகவும் ஒருநாள் தான் வெகுநேரம் கழித்து அறைக்கு வந்து கதவைத் திறந்தபோது அறையின் உள்ளிருந்து வெண்மையான புகைவடிவில் ஒரு பெண் உருவம் விருட்டென்று வெளியேறியதாகவும் அப்படி வெளியேறும் போது காற்றுபோல் தன்னைத் தள்ளிவிட்டுச் சென்றதாகவும் அப்போது மிகவும் குளிர்ச்சியான சூழலைத் தான் உணர்ந்ததாகவும் கூறினார். 


  அந்தச் சம்பவம் நடந்த பிறகு தனக்கு 2 நாட்கள் கடுமையான ஜுரம் இருந்தது என்றும் ஆயினும் தான் அந்தக் காற்றுப் பெண்ணைப் பற்றி எந்த விவரத்தையும் யாரிடமும் சொல்லவில்லை என்றும் நாளடைவில் தனக்கு உடல் பலஹீனமும் படிப்பில் தடுமாற்றமும் நண்பர்களிடத்தில் விரோதமும் ஏற்பட்டு விட்டதாகவும் கூறிய அவர்

 கல்லூரிப் படிப்பை விருப்பம் இல்லாமலே ஏனோதனோ வென்று படித்து முடித்தேன்.  கல்லூரி வாழ்க்கை முடிந்த சில மாதங்களில் யாரோ என்னைத் தொடுவது போன்றும் யாருடனோ படுக்கையைப் பதிர்ந்து கொள்வது போலவும் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தது.  பெற்றவர்களிடம் சொன்னால் பயந்து விடுவார்கள் என்று மறைத்தே வைத்து இருந்தேன்.  அயல் நாட்டில் வேலை கிடைத்த பிறகும் அதே போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நீடித்தது. 


  அப்படி இருக்கையில் ஒரு நாள் நான் விடுதி அறையில் பார்த்த அதே பெண்ணை வேறு ஒரு வடிவத்தில் என் கண்ணெதிரே நேருக்கு நேராகப் பார்த்தேன்.  அப்பெண் என்னை அப்போதும் தொட முயற்சித்தாள்.  ஆனால் நான் கந்தசஷ்டி கவசத்தை சொல்ல ஆரம்பித்ததும் அவள் மறைந்து விட்டாள்.  அதன் பிறகு அடிக்கடி நான் அவளைப் பார்க்கிறேன்.  இதனால் வேலையில் தடுமாற்றமும் புத்தி தடுமாற்றமும் ஏற்படுவதை உணர்கிறேன் என்று பரிதாபமாகக் கூறினார்.

 அவர் கூறிய இந்த சம்பவத்தைக் கேட்பவர்கள் யாராக இருந்தாலும் ஆவி வந்து இவரைத் தொடர்ச்சியாக துரத்தி வருகிறது என்றுதான் நம்புவார்கள்.  ஆனால் அவர் என்னை சந்தித்த அந்த நேரத்தில் அவர் உடம்பில் ஆவிகள் தொல்லை செய்வதற்கான வாய்ப்புகள் ஏதும் அற்ற அறிகுறிகளே தென்பட்டது.  அவரது பேச்சைப் பகுத்து ஆராய்ந்தபோது அவர் மணதிற்குள் உள்ளவற்றை நுணுக்கமாக ஆராய்ந்தபோது ஓர் உண்மை தெரிந்தது அவர் விடுதி அறையில் சந்தித்த ஆவி சம்பவம் நிஜமானதுதான்.


  ஆனால் அந்த ஆவி அவரைத் தொடர்ந்து துரத்தி துன்புறுத்தவில்லை.  அதன் பின்னர் அவருக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் எல்லாம் அவரை அறியாமலே அவர் மனது கற்பித்துக் கொண்ட பிரம்மையான தோற்றங்களே ஆகும்.  முதன் முதலில் ஆவியைப் பார்த்ததன் விளைவு அவருக்குள் ஆழமான பயத்தை ஏற்படுத்தி இருந்ததனாலும் இயற்கையாகவே பாலூணர்வு பற்றிய வேட்கை அவருக்குள் புதைந்து கிடந்ததனாலும் இந்த மாதிரியான சம்பத்தைக் கற்பித்து மனது செயல்பட்டு இருக்கிறது.

 ஆவிகளைப் பார்ப்பது பற்றி இப்படித்தான் பல சம்பவங்கள் உண்மையோடு கற்பனை கற்பிதங்களும் கலந்து நடமாடுவதால் எது  உண்மை எது பொய் என அறிவது மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது.  சில கிராமவாசிகள் தாங்கள் இரவில் கழனிக்குச் செல்கிறபோது ஆள் உயரத்திற்கு நெருப்புக் கம்பம் ஒன்று நடந்து சென்றதாகவும் அதைத் தாங்கள் இரண்டு கண்களாலும் சத்தியமாகப் பார்த்ததாகக் கூறுவார்கள்.  அவர்கள் அப்படிக் கூறுவதும் பொய் அல்ல.அவர்கள் பார்த்த தோற்றமும் பொய்யானது அல்ல.


   ஆனால் அது ஆவி அல்ல.  பூமியிலிருந்து கிளம்பும் ஒருவித வாயு காற்றில் கலப்பதனால் தானாகப் பற்றி எரிந்து காற்றில் நகருவதையே இப்படிக் கூறுகிறார்கள்.  இதை நெருக்கமான நகரங்களில் காண இயலாது.  பரந்து விரிந்த கரிசல் மண் வண்டல்மண் போன்ற மணற்பரப்புகளிலேயே இத்தகைய காட்சிகளைக் காணலாம்

ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஆவிகள் மனிதர்களின் அருகாமையை விரும்புவது அதிகம் உண்டு.  ஆனால் ஆவிகள் மனிதர்களின் கண்களுக்குள் அகப்படுவதைப் பொதுவாக விரும்புவது கிடையாது.  தான் விரும்பினால் மட்டுமே மனிதர்களுக்குத் தனது தோற்றத்தை சில நிமிடங்கள் காட்டும்.

 மற்றபடி ஆவிகள் தங்களது இருப்பை சில ஒலிகள் மூலம் வாசனைகள் மூலமும் மனிதர்களுக்குக் குறிப்பிட்டுக் காட்டும்.  ஆனால் ஆவிகள் நாய்கள், பூனைகள், ஆடு மாடுகள் போன்ற விலங்குகளுக்குச் சர்வ சாதாரணமாகத் தெரியும்.  நமது நடமாட்டத்தை விலங்குகள் எப்படி அவதானிக்கிறதோ அது போன்றே ஆவிகளின் நடமாட்டத்தையும் துல்லியமாக அறிகிறது.  இதற்கு உதாரணமாக யாருமே இல்லாத வெற்று திசையை நோக்கி நாய்கள் தொடர்ச்சியாகக் குரைப்பதையும் இல்லாத ஆளை துரத்திக் கொண்டு செல்வதையும் கூறலாம்.


   ஆவிகள் இருக்கும் பகுதியை மனிதர்கள் வேறு எந்தவகையில் அறியலாம் என்றால் அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு நாம் சென்ற உடன் தேவை இல்லாமல் உடல் புல்லரிக்கும்.  மன ஒட்டங்கள் தாறுமாறாக ஓடும்.  நமது கவனம் முழுமையாகச் சிதறும்.  அப்போது மனதைப் பிடித்து இழுத்து ஒரு மையப்புள்ளியில் நிறுத்தினால் இது சாத்யமாகும் நபர்க்கு ஆவிகள் வெண்படலமாகவோ கரும்படலமாகவோ தெரியும்.  மற்றபடி ஆவிகள் பார்க்க இயலாது.

 பிரத்தியேகப் பயிற்சி எடுத்தவர்கள் வேண்டுமானால் தாங்கள் விரும்புகின்ற படி ஆவிகளை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் அழைத்துப் பார்க்கலாம், பேசலாம்.  அவைகளுக்குச் சில வேலைகள் தரலாம்.  அதன் மூலம் முடியாத பலவற்றை முடித்தும் காட்டலாம்.  ஆனால் அது மாந்தீரிகனாக இருப்பதற்கு உதவுமே அல்லாது நல்ல மனிதனாக இறைவனிடம் சேர்வதற்கு உதவாது.

 ஆவிகளை அனைவராலும் பார்த்து விட முடியாது என்கின்றபோது அவைகளைச் சிலர் புகைப்படம் எடுத்து இருக்கிறார்களே அது எப்படி நிகழந்தது என்ற வினா எழும்புவது இயற்கை முதன் முதலில் ஆவிகளைப் படம் பிடிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் வில்லியம் மம்ளர் ஆவார்.  இவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். 


  1868 ஆம் வருடத்தில் வேறு ஒரு காட்சியைப் புகைப்படம் எடுத்துக் கழுவி பார்த்தபோது சில வருடங்களுக்கு முன்பு இறந்து போன தனது உறவினர் ஒருவன் நிழல் உருவம் புகைப்படத்தில் படிந்து இருப்பதைப் பார்த்து வியந்து போனார்.  பின்னர் பல புகைப்பட நிபுணர்களிடம் அந்தப் படத்தைக் காட்டி இது எப்படி நிகழ்ந்து இருக்கும் என்று ஆராயச் சொன்னார்.

  இந்த புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதே காலகட்டத்தில் வேறு சில ஆவிகளின் புகைப்படமும் ஆராய்ச்சியாளர்கள் எடுத்த புகைப்படமும் எந்த வித சந்தேகத்திற்கும் இடமில்லாத உண்மையான புகைப்படம் என்ற முடிவிற்கு வந்தனர்.  அதன்பின் பல்வேறு நிஜ ஆவி புகைப்படங்கள் உலக ஆவி ஆர்வலர்களுக்கு இடையில் இன்று நடமாடுகிறது.

இந்தப் புகைப்படங்கள் அனைத்துமே திட்டமிட்டு காத்திருந்து எடுத்த புகைப்படங்கள் அல்ல.  யதேச்சையாக கேமரா கண்களுக்குள் சரிவர அகப்படாத ஆவிகள் புகைப்படத்திற்குள் அகப்பட்டுக் கொள்வது ஒரு அதிசயம் ஆகும்.  அதற்கான காரணங்கள் இதுவரை புரிய படவில்லை. 


  ஆவிகள் உண்டு என்ற நம்பிக்கையை உலகிற்கு வழங்கிய நமது நாட்டில் ஏனோ இதுவரை ஆவிகளைப் படம் பிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெறவில்லை.  வருங்காலத்தில் அதைச் செய்வதற்கு இறைவன் நமக்குத் துணை செய்வான் என்று நம்புகிறேன்.  மேலும் இங்கு ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும்.  ஆவிகளின் புகைப்படம் என்று இன்று வெளிவரும் பெருவாரியான புகைப்படங்களில் மனிதர்களின் கைவண்ணத்தால் கருவிகளைக் கொண்டு செய்யும் மேஜிக் தோற்றங்கள் அதிகமாக இருக்கிறது.  அவற்றில் உண்மையானதைத் தேர்ந்து எடுப்பதே மிகக் கடினப் பணியாக உள்ளது.  அசலை விட போலியே அதிகமாக உள்ள துறைகளில் ஆவிகளின் புகைப்படத் துறையும் ஒன்றாக இருக்கிறது.

நான் சென்னை முகாமில் இருந்த போது ஆவிகளின் புகைப்படங்களை ஆராய விரும்பி இணையதளங்களில் இருந்து சில புகைப்படங்களைப் பிரதி எடுக்கச் சொன்னேன்.  எங்கள் இடத்தில் இருந்த கணிப்பொறி மூலம் பிரதி எடுக்கும் வேலை நடந்து கொண்டு இருந்த போது ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தினை நகல் எடுக்க முயற்சித்த போது திடீரென கணிப்பொறி செயல் இழந்தது.  


   அதே நேரம் வெளியில் தென்னை மரத்தில் இருந்த இளம் தேங்காய் ஒன்று பொத்தென அறுந்து வீழ்ந்தது.  அறையினுள் குபீர் என வெப்பக் காற்று வீசியது.  இவைகள் எல்லாம் தற்செயலான நிகழ்வுதான் எனக் கருதி மீண்டும் பணியைத் தொடர முயற்சித்தோம்.  அப்போதும் முன்பு போலவே அச்சரம்பிசகாமல் அந்தச் சம்பவம் நடந்தது.  இப்படி மூன்று முறை முயற்சித்த போதும் அந்த படத்தை நகல் எடுக்க முடியாமல் ஒரே மாதிரியான தடங்கல் ஏற்பட்டது.

அதன் பின்னரே இது தற்செயலான நிகழ்வாக இராது.  ஏதோ ஒரு அதீத சக்தி இத்தடங்கலைத் திட்டமிட்டே நடத்துகிறது என முடிவுக்கு வந்து எனது வழிகாட்டும் தேவதைகளை அழைத்துச் கேட்டோம்.  அவைகளிடமிருந்து வந்த பதில் எங்களைத் திடுக்கிடவைத்தது.

 நீங்கள் நகல் எடுக்க விரும்பியது பூனை வடிவில் உள்ள ஒரு எகிப்திய ஆவி.  அது 2000 வருடமாக பூனை வடிவிலேயே பூமியில் அவ்வப்போது நடமாடி வருகிறது.  தற்செயலாக புகைப்படச் சுருளில் அந்த ஆவியை பதிவு செய்ய முடிந்து இருக்கிறது.  அது தனது இருப்பை இந்த வகையில் உங்களுக்குக் காட்டி இருக்கிறது என்று தேவதைகள் கூறின. 


  அதன்பின்னர் ஒரு பிரார்த்தனை செய்துவிட்டு படத்தை நகல் எடுத்தேன்.  அந்தப் படத்தைப் பற்றிய சம்பவம் எங்களுக்கு வியப்பை தந்தாலும் ஒரு ஆவி 2000 வருடமாகப் பிறப்பு எடுக்காமல் இருக்க முடியுமா என்ற ஒரு வினா எங்களுக்குள் எழுந்தது.  அதைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க மனம் தூண்டியது.

மந்திரக் கலையிலும், அமானுஷ்யத் துறையிலும் அனுபவம் உள்ள சிலரிடம் இறந்த பிறகு ஆவிகள் சுமார் எத்தனைக் காலம் மேல் உலக வாசத்தை ஆத்மாக்கள் மேற்கொள்ளும் எனக்கேட்டேன்.  ஒவ்வொருவரின் பதிலும் வெவ்வேறு விதமாக இருந்ததே அல்லாது கேள்விகளுக்கான முழுமையான பதிலை யாராலும் தர இயலவில்லை.  அவரவர் தங்களுக்குச் சரியெனப்பட்ட காலத்தைக் கூறினார்களே அல்லாது சரியான தீர்க்கமான பதிலைக் கூறவில்லை.

 எனவே ஆவிகளிடமே இக்கேள்விகளுக்கான பதிலைப் பெற்று விடுவது என்று தீர்மானித்தோம்.  சோதனைக்காக இறந்து 75 வருடமன எங்களுக்குத் தெரிந்த ஒருவரின் தாத்தாவின் ஆவியைக் கூப்பிட்டு பார்த்தோம்.  அதற்கு ஆவி உலக வழிகாட்டிகள் தாங்கள் குறிப்பிட்டு அந்த ஆவி பூமியில் பிறந்து விட்டது.  எனவே அதனோடு பேச இயலாது என்ற பதிலை தந்தது.  75 வருடத்திற்குள்ளேயே ஆவிகள் பிறப்பு எடுக்கும்போது 2000 வருடம் எப்படி ஒன்று ஆவியாகவே இருக்கும்?


   இந்த வினா அப்போது உடனிருந்த பலருக்கு எழுந்தது.  எனவே இறப்பெய்தி 22 வருடங்களான ஒரு பெண்ணின் ஆவியை அழைத்தோம்.  அந்த ஆவியிடம் எங்கள் கேள்வியை வைத்தோம்.  அதற்கு ஆவி தந்த பதிலை அப்படியே தருகிறேன்.  இங்கு கால நேரம் என்று எதுவும் கிடையாது.  அல்லது எங்களுக்கு அது உணர்வுக்கு வராமல் மறைக்கப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன் கராணம் நான் இறந்து 22 வருடங்கள் ஆவதை எனக்கு வைக்கப்படும் வருடாந்திர தர்ப்பணமே நினைவுபடுத்துகிறது.

 ஆனால் எனக்கு இந்த 22 வருடங்களும் எதோ ஒன்றிரண்டு நாட்கள் போலவே தெரிகிறது.  மேலும் பூமியில் வாழும் காலத்தில் நாங்கள் செய்த செயல்கள் எண்ணிய எண்ணங்கள் ஆகியவற்றிற்கு ஏற்பவே இங்கு எங்களின் நிலை அமைகிறது.  நிறைய ஆவிகள் இங்கு வேதனையோடு அழுவதையும் ஆத்திரத்தோடு கூச்சலிடவதையும் சந்தோஷமாக ஆடிப்பாடித் திரிவதையும் பார்க்கிறேன்.  பூமியில் எப்படி ஒரவருக்கு ஒருவர் அறிமுகமாகி இருக்கிறோமோ அதே மாதிரி இங்கேயும் நாங்கள் சக ஆவிகளுடன் பரிச்சயம் செய்து கொள்வோம்.  திடீரென்று ஒரு ஆவி காணாமல் போய்விட்டால் அது பூமியில் பிறந்து விட்டது என்று நினைத்துக் கொள்வோம்.  அந்த பிரிவு எங்களுக்கு சந்தோஷத்தையோ துயரத்தையோ தருவதில்லை.


  பானிபட் யுத்தத்தில் பலியான ஆவிகள் கூட இன்னும் இங்கே இருக்கின்றது.  திடீரென்று வந்த சில பொழுதிலேயே கருவறை வாசத்தை மேற்கொள்ள அனுப்பப்பட்ட ஆவிகளும் இங்கு வந்து போய் உள்ளன.  ஏன் சில ஆவிகள் பல காலம் இங்கே இருக்கின்றது.  சில மட்டும் ஏன் உடனடியாகப் பிறப்பு எடுக்கச் சென்று விடுகின்றன என்பது எங்களுக்குத் தெரியாது.  அவைகள் எல்லாம் இங்கு நடமாடும் சில தேவதைகளுக்கும் தூரத்தில் எட்ட முடியாத வெளிச்சமாக தெரியும் ஒரு மகாசக்திக்குமே அந்த ரகசியங்கள் தெரியும்  என்று அந்த ஆவி கூறியது.

இதை வைத்துப் பார்க்கும் போது ஆவிகளின் ஆயுட் காலம் எந்தக் கணக்கிற்கும் அகப்படாத ஒரு புரியாத புதிராகவே இருக்கும் என்று தோன்றுகிறது. பாவ புண்ணியங்களின் அளவில் சொர்க்க நரகங்கள் தீர்மானிக்கப்பட்டால் அவைகளில் வாசம் புரியும் காலம் பிறப்புக் கடவுகளின் கையிலேயே இருப்பது புரிகிறது.  யாருக்கு எப்போதும் பூமி வாசம் கொடுக்க வேண்டும் என்று அவன் கருதுகிறானோ அதுவரை ஆவிகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆனாலும் கூட சூட்சம் தேகத்திலேயே வாழும்படி நேரிடுகிறது.  அப்படி வாழ்வது தண்டனையா சன்மானமா என்பது நமக்குப் புரியவில்லை.  அதைக் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் நமக்கு இல்லை.



 ------> இனி உஜிலாதேவி பதிவுகளை செல்பேசியிலும் வாசிக்கலாம் அதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது Google Play‎ Store -க்கு சென்று Ujiladevi என்று டைப் செய்து நமது Apps உங்கள் தொலைபேசியில் Download  செய்து கொள்ளுங்கள் அல்லது  

நேரடியாக Download செய்ய கிழே கிளிக் செய்யவும் 



-----------------------------------------

Contact Form

Name

Email *

Message *